சாவு வீடு என முதலில் வைக்கப்பட்டிருந்த டைட்டிலை சாவீ என சுருக்கியிருக்கிறார்கள்.
முறைப்பெண்ணான கவிதாவை காதலிக்கிறார் உதய தீபா. ஆனால் அவர் மீதான முந்தைய கசப்பு காரணமாக அவருக்கு பெண் கொடுக்க யோசிக்கிறார் மாமா. அவர் பல வருடங்களுக்கு முன்பு டைரக்ஷன் பண்ணிய படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படி அவர் பெண் கொடுக்க மறுத்த நிலையில் திடீரென மரணமடைகிறார்.
அதுமட்டுமல்ல, அன்று இரவு வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலும் காணாமல் போகிறது. எல்லோரின் சந்தேகப்பார்வையும் உதய தீபா மீது திரும்புகிறது. போலீஸ் அதிகாரி ஆதேஷ் பாலா இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கும் போது உதய தீபாவின் தந்தை மரணத்தின் பின்னால் இந்த இரண்டு மாமாக்களும் இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் விஷயம் தெரிய வருகிறது.
கடைசியில் மாமா எப்படி இறந்தார் என கண்டுபிடித்தார்களா ? அவரது உடலை நள்ளிரவில் யார் எடுத்துச் சென்றது அதன் பின்னணியில் என்ன காரணம் உதய தீபாவும் கவிதாவும் இணைந்தார்களா என்பது மீதி கதை
சுறுதுறுப்பான துடுக்குத்தனமான விடலைப்பையன் கதாபாத்திரத்தில் உதயதீபா ரொம்பவே பொருத்தம். கூடவே கொஞ்சம் காமெடியும் அவருக்கு கை கொடுக்கிறது. அம்மா, மாமா இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவர் அவஸ்தைப்படுவது செம காமெடி.
நாயகியாக வரும் கவிதா சுரேஷ் முறைப்பெண் என்றாலும் கூட கண்டிப்பும் கராருமான காதலியாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.. அவரது தந்தையாக வரும் ஆரோக்கிய ராஜ் கதாபாத்திரம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் அதுவே நம்மை கவனம் இருக்கிறது.
அவரது அண்ணனாக நடித்துள்ளவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். உதய தீபாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிப்பில் ரொம்பவே எதார்த்தம் காட்டி நடித்திருக்கிறார். படம் முழுவதும் டென்ஷன் அண்ட் டெரர் போலீசாக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா இத்தனை நாளாக இவர் எங்கே இருந்தார் என்று கேட்க வைக்கிறார். இனி இவருக்கு நிறைய வாய்ப்புகள் அடுத்தடுத்து தேடி வரலாம்.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குனர் ஆண்டனி அஜித் ஒரு குடும்பத்திற்குள் அடுத்தடுத்து நடக்கும் இரண்டு, மூன்று மரணங்களை மையமாக வைத்து அதே சமயம் காமெடி பிளஸ் திரில் கலந்து கொடுத்திருக்கிறார். கதை ஓட்டத்தில் சில பல குறைகள் தெரிந்தாலும் கூட ஓரளவுக்கு சிரிப்புக்கு உத்தரவாதம் தரும் படம் தான் இந்த சாவீ.









Leave a Reply