சமகால சமூகத்தின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றான கல்வியின் அவசியத்தையும், பழங்குடி மக்களின் எதார்த்த வாழ்வியலையும் மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள படம் தான் அருள்வான்’ . வெளி உலகத் தொடர்பற்ற மலைக்கிராமத்தில் வாழும் மக்கள், கல்வியின்மையால் எதிர்கொள்ளும் துயரங்களையும் இப்படம் உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்கிறது.
குறிஞ்சி என்ற சிறுமி, தனது சமூகத்தின் எதிர்காலம் கல்வியில் தான் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து, ஒரு பள்ளியை உருவாக்குவதற்காக மலையிலிருந்து நகரத்திற்கு மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கத் தனியாக மேற்கொள்ளும் துணிச்சலான பயணமே படத்தின் கதைக் கரு.
அந்தச் சிறுமியின் போராட்டம், மாவட்ட ஆட்சியர் முத்துவேல் அவளது கோரிக்கையை ஏற்றுச் சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் விதம் என படம் முழுவதும் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மனிதாபிமானத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிஞ்சி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பேபி கிருத்திகா, படத்தின் முழு பாரத்தையும் தனது தோளில் சுமந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மாவட்ட ஆட்சியராக வரும் அருள்நிதி, மிகக் குறைவான திரை நேரத்திலும் தனது முதிர்ச்சியான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார்.
பழங்குடி இளைஞராக ஆரவ் இயல்பான நடிப்பையும், தாயாக ரம்யா பாண்டியன் அமைதியான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜான் விஜய், காளி வெங்கட் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு ஒத்துழைக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாக, ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் மலைப்பகுதியின் இயற்கை அழகையும், மக்களின் வாழ்வையும் மிக அழகாகப் படம்பிடித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை, படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.
இயக்குநர் கணேஷ் விநாயகன், சமூக அக்கறையுடன் ஒரு முக்கியமான கருத்தை இப்படம் வழியாகப் பதிவு செய்துள்ளார். இருப்பினும், சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதும், சில காட்சிகள் யூகிக்கக்கூடியதாக இருப்பதும் குறைகளாகத் தெரிந்தாலும், சமூகப் பொறுப்புடன் சொல்லப்பட்ட ஒரு நேர்மையான படைப்பாக ‘அருள்வான்’ கவனம் பெறுகிறது









Leave a Reply