ஒரே பள்ளியில் படிக்கும் ராம், அப்துல்லா, ஆண்டனி மூன்று பேரும் ஒரே வீட்டில் பிறந்தவர்கள் போல நெருங்கி ஒன்றாக பழகி வருகிறார்கள். அந்த ஊர் பெரிய மனிதரான மேல ராமமூர்த்தியின் பேரனான கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார்கள் இதை விசாரிப்பதற்காக வரும் இன்ஸ்பெக்டர் சாய்தீனா இவர்கள் கொலை செய்ததை கண்டுபிடித்து வேல ராமமூர்த்தியின் உத்தரவுபடி நீதிமன்றம் போகாமலேயே அவர்களை தீர்த்து கட்ட முயற்சி செய்கிறார்.
ஆனால் அதே ஸ்டேஷனில் இருக்கும் கான்ஸ்டபிள் சவுந்தர்ராஜா இந்த மூவரையும் காப்பாற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்கிறார். அங்கேயும் அவர்கள் மீது கொலை முயற்சி நடக்கிறது. அதிலும் அவர்கள் தப்பிக்கிறார்கள். இதில் திடீரென அப்துல்லா, ஆண்டனி இருவரும் இந்த கொலையில் ராமுக்கு சம்பந்தமில்லை என்று கூறி விட ராம் விடுதலை ஆகிறான்.
வெளியே வந்து பள்ளிக்கூடம் செல்லும் அவன் திருக்குறள் மனப்பாடமாக ஒப்புவிக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறான். அதற்காக கலெக்டரிடம் பரிசு பெறப் போகும் நேரத்தில் தனது கூட்டாளிகளான அப்துல்லாவும் ஆண்டளியும் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என நிபந்தனை விதிக்கிறான். அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய உண்மை ஒன்றே மூவரும் போட்டு உடைக்கின்றனர்.
அப்படி என்ன அதிர்ச்சியான உண்மை ? எதற்காக ஒரு சிறுவனை கொல்லும் அளவிற்கு இவர்கள் துணிகிறார்கள் ? உண்மையிலேயே இவர்கள் தான் சிறுவனை கொன்றார்களா ? இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது.
ஆண்டனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கப்பீஸ் பூவையார், ராம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அஜய் அர்னால்டு, அப்துல்லா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜூன் ஆகிய மூன்று பேரும், படத்தின் துவக்கத்திலேயே தங்கள் மீதான எதிர்மறை என்னத்தை நம்மிடம் தோற்றுவிப்பதில் ஜெயித்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது.
நடிகர் சௌந்தரராஜா தனக்கு கொடுத்த போலீஸ் கான்ஸ்டபிள் பாத்திரத்தில் தன் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளார். படத்தின் இரண்டாவது பாதியில் அவரது பாத்திரம் மேலும் அழுத்தம் பெறுகிறது.
வேல.ராமமூர்த்தி, சாய் தீனா ஆகியோர் வழக்கமான ஸ்டைலில் நடித்துள்ளனர்.. மாணவர்களின் பெற்றோர்களாக நடித்த ஜாவா சுந்தரேசன், வினோதினி, தலைவாசல் விஜய், கிச்சா ரவி ஹரிதா ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களில் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை அளவு. ஒளிப்பதிவாளர் எல்.கே.விஜயின் பணி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான ஒருவித விழிப்புணர்வுடன் திரைக்கதையை எழுதி இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் ஜெயவேல். என்னடா சிறுவர்களை வைத்துக்கொண்டு இப்படி கதையை நகர்த்துகிறார்களே என நினைத்துக் கொண்டு பார்க்க உட்கார்ந்தால் போகப் போக படம் சொல்லும் விஷயம் நம்மை அப்படியே கட்டிப்போடுகிறது. இந்த கருத்தை இன்னும் வலுவாகவும் தாக்கமுள்ள காட்சிகளுடனும் வெளிப்படுத்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்..









Leave a Reply