அவ்வப்போது யூட்யூப் பிரபலங்கள் சிலர் ஒரு மர்ம மனிதரால் கொலை செய்யப்படுகின்றனர். அந்த வகையில் நாயகன் மகேந்திரன் மற்றும் நாயகி நீமா ரே ஆகியோரும் அந்த மர்ம நபரால் கடத்தப்பட்டு காட்டுப்பகுதியில் கட்டிப்போடப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.. ஆனால் அவனிடமிருந்து திடீரென இருவரும் தப்பிக்கின்றனர்..
இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரிகளான சேரன்ராஜ் மற்றும் சிசர் மனோகர் இருவரும் அந்த காட்டுப்பகுதிக்குள் ஏதோ சத்தம் கேட்டு அதை தேடி உள்ளே நுழைகின்றனர்.. அவர்களால் இந்த ஜோடியை காப்பாற்ற முடிந்ததா ? யார் அந்த மர்ம மனிதன் ? எதற்காக யூட்யூப் நடத்தும் ஆட்களாக கொலை செய்கிறான் என்பதற்கு மீதிக்கதை விடை சொல்கிறது.
கதையின் நாயகனாக கர்ணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரனை அவர் இந்த படத்தின் தயாரிப்பளார் என்பதாலேயே ஏற்றுகொள்ள வேண்டி இருப்பது படம் பார்க்க வரும் ரசிகனுக்கு சிறப்பு தண்டனை.
கதாநாயகி நீமா ரே மட்டுமல்ல, பாசமுள்ள அண்ணனாக நடித்திருக்கும் இயக்குனர் சிக்கல் ராஜேஷும் அவரது தங்கையாக நடிப்பவரும் கூட இயல்பாக நடிக்க வெகுவாக சிரமப்பட்டு இருக்கிறார்கள். நாடகத்தனமாக பல காட்சிகள் வந்து போகின்றன.
ஆனால் படத்தைப் பொறுத்த அளவில் வில்லன் என்றாலும் நியாயப்படி இயக்குனர் சிக்கல் ராஜேஷ் தான் ஹீரோ என்று சொல்ல வேண்டும். நாயகி நீமா ரே கவர்ச்சியிலும் தாராளம் காட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்துகிறார்.
நிழல்கள் ரவி, சேரன் ராஜ், சிசர் மனோகர் உள்ளிட்டோர் தங்கள் முகத்தால் இதை ஓரளவு ஒரு கமர்சியல் படமாக உணர வைத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எம்.அசார், இசையில், அஸ்மிதா ஆடும் குத்துப்பாடல் ரசிகர்களை கொஞ்சம் குஷிப்படுத்தும். ஒளிப்பதிவாளர் பாஸ்கர் இரவு நேர காட்சிகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தற்போதைய காலக்கட்டத்திற்கு சொல்லப்பட வேண்டிய கதை தான் என்றாலும் அமெச்சூர்த்தனமாக அதை படமாக்கி இருப்பதுதான் வருத்தமளிக்கிறது. இருந்தாலும் சோசியல் மீடியா மோகத்தில் மூழ்கியிருப்பவர்களின் அத்துமீறிய செயல்களை கண்டிப்பதோடு, அவர்களுக்கு அதிரடியான முறையில் அறிவுரை கூற முயற்சித்திருப்பதை அவரது நோக்கத்தை பாராட்டலாம். .









Leave a Reply