மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்லி, நிரோஷா தம்பதியின் மூத்த மகள் அனுபமா பரமேஸ்வரன். கிடைக்கும் வேலைகள் எல்லாம் இரவு நேர ஷிப்ட் என்பதால் அவரது தந்தை தடுத்து விடுகிறார். அதனால். தன் தோழி ஒருத்தியின் உதவியுடன் பகல் ஷிப்ட் வேலைக்காக தோழியின் நண்பரை பார்க்க ஒரு பார்ட்டிக்கு செல்கிறார் அனுபமா. அந்த பார்ட்டியில் தன்னை மீறி உற்சாக கொண்டாட்டத்தில் இறங்கி சரக்கு அடித்து விட்டு மயங்கி விடுகிறார். வீட்டுக்கு வந்த பிறகு சில நாட்கள் கழித்து தான் தெரிகிறது அன்றைய தினம் மயக்கத்தில் இருந்த அவரை யாரோ உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பது.
மூன்று மாத கர்ப்பம் என தெரிய வந்த நிலையில் நெருங்கிய தோழியின் உதவியுடன் கர்ப்பத்தை கலைக்க முயற்சிக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் லாக்டவுன் போடப்படுகிறது. இந்த சூழலில் கருவை கலைக்க மாத்திரை கிடைக்காமல் டாக்டரை அணுகினால் அவர்கள் கேட்கும் பணத்தை புரட்ட முடியாமல் என பல சிக்கல்களை எதிர்கொண்டு இன்னொரு பக்கம் வீட்டாரின் சந்தேக கேள்வியும் சமாளித்துக் கொண்டு கருவை கலைத்தே தீருவேன் என தீவிரம் காட்டுகிறார் அனுபமா. அவரால் அதை சாதிக்க முடிந்ததா ? இல்லை குடும்பத்தாருக்கு உண்மை தெரிய வந்ததா என்பது கிளைமாக்ஸ்.
இன்றைய இளம் பெண்கள் இருந்தோ தெரியாமலோ நாகரிகம் என்கிற பெயரில் பார்ட்டிக்கு செல்வது சரக்கு அடிப்பது போன்றவற்றை போகிற போக்கில் செய்கிறார்கள். ஆனால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை அவர்கள் அறிவதில்லை. அப்படி ஒரு பெண்ணுக்கு எதிர்பாராத நிகழ்வு நடந்தால் அந்தப் பெண் என்னவெல்லாம் சங்கடங்களையும் சஞ்சலங்களையும் சந்திப்பாள் என்பதை படம் முழுவதும் தனது கதாபாத்திரம் மூலம் அழகாக பிரதிபலித்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். ஒரு பக்கம் அவர் மீது கோபம் வந்தாலும் கூட இன்னொரு பக்கம் அவர் பரிதவிக்கும் காட்சிகளை பார்க்கும் போது நமக்கும் பாவமாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல வேண்டும். கதாநாயகன் என யாரும் இல்லை.
அனுபமாவின் தோழியாக வரும் பிரியா வெங்கட் படபட பட்டாசாக பொரிந்து தள்ளி நம்மை கவர்கிறார். பாசமான பெற்றோராக சார்லி, நிரோஷா தம்பதியினர். அதேசமயம் மகளின் திடீர் மாற்றம் கண்டு சந்தேகப்படும் எதார்த்தமான ஒரு அம்மாவை நிரோஷா அழகாக பிரதிபலிக்கிறார். ஏமாற்றுப் பேர்வழியாக டாக்டருக்கு உதவும் கம்பவுண்டராக கொஞ்ச நேரமே வந்தாலும் மாறனின் காமெடி சீரியஸ் ஆக செல்லும் படத்தை கலகலப்பாக்குகிறது.
அனுபமாவுக்கு மாத்திரை தர யாருக்கும் அந்த கண்டிப்பான மெடிக்கல் ஷாப் இளைஞன் நம்மை கவர்கிறார்.. அதைவிட கருக்கலைப்பு செய்ய முன்வரும் அந்த டாக்டர் கதாபாத்திரமும் கடைசி பத்து நிமிடங்களில் நம்மிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. நன்றாக நடித்திருக்கிறார்.
இந்த படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படம் பார்ப்பவர்களை என்ன நடக்குமோ என்கிற தவிப்புடன் அமர வைத்திருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேசமயம் ஒரு பெண் தன்னுடைய பொறுப்பின்மை காரணமாக படும் துன்பத்தை நாமும் ஏன் பார்த்து சகிக்க வேண்டும் என்கிற கேள்வியையும் எழுப்புகிறது. ஆனாலும் இன்றைய இளம் பெண்களுக்கு நிச்சயமாக இது ஒரு விழிப்புணர் படம் என்பதில் சந்தேகம் இல்லை.









Leave a Reply